ராமகிருஷ்ணசாமி 
உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக அளவில் 2-ம் இடம் பிடித்த நாமக்கல் அரசு அதிகாரி

தொழில் மையத்தில் உதவி பொறியாளராக ராமகிருஷ்ணசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.தற்போது, ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக ராமகிருஷ்ணசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ் (யு.பி.எஸ்.சி) தேர்வு எழுதினார்.

தற்போது, ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் அவர் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 117-வது இடம் பிடித்துள்ளார். தமிழக அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து ராமகிருஷ்ண சாமி கூறியதாவது:-

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் எனது சொந்த ஊர். தந்தை ரங்கராஜ். தாய் தனலட்சுமி. கடந்த 2016-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பி.இ., மெக்கானிக்கல் படித்து முடித்தேன். தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்தேன்.

எனினும், படிக்கும் காலத்தில் இருந்தே யு.பி.எஸ்.சி தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது. எனவே யு.பி.எஸ்.சி தேர்வுக்கும் தயாராகி வந்தேன்.

யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயார் செய்யும் சமயத்தில், கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்திய உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன்.

அதன் அடிப்படையில், தற்போது நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன். அரசுப் பணி கிடைத்தாலும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதே எனது குறிக்கோள். எனவே தொடர்ந்து அதற்காக பயிற்சி எடுத்து வந்தேன்.

ஏற்கனவே 2 முறை நேர்முகத்தேர்வு வரை சென்று தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால் அந்த அனுபவத்தை வைத்து இந்த ஆண்டு மிகவும் கவனமாக படித்து தேர்வு எழுதினேன். தற்போது 3-வது முயற்சியில், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று, அகில இந்திய அளவில் 117 இடத்தைப் பிடித்துள்ளேன். தமிழக அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.