பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம், எல்லைமேடு பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரின் விவசாய கிணற்றில் அடையாள தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த ஆண் உடலை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்தவருக்கு சுமார் 40 முதல் 50 வயது வரை இருக்கும். பச்சை நிற கை வைத்த பனியனும், நீல நிற வெள்ளை கோடு கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.