இடம் மாறி செயல்பட்ட வாரச்சந்தை. 
உள்ளூர் செய்திகள்

தேர்தலால் இடம் மாறிய வாரச்சந்தை

உள்ளாட்சி தேர்தல் காரணமாக சேந்தமங்கலம் வாரச்சந்தை இடம் மாற்றப்பட்டதால் விவசாயிகள் அவதிப்பட்டனர்.

மாலை மலர்

கொல்லிமலை: 

சேந்தமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தையில் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் கடந்த வாரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தேதி அறிவிக்கப்பட்டதால் அன்றைய தினம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனால் நேற்று தேர்தல் அலுவலர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில் சந்தைக்கு வரும் வியாபாரிகள் புதிய பஸ் நிலைய வளாகத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதன்படி நேற்று காலை முதல் மதியம் வரை புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து சந்தை கடைகளும் அமைக்கப்பட்டது. 

ஆனால் மதியத்திற்கு மேல் திடீரென சில கடைகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு போடப்பட்டதால் புதிய பஸ் நிலையத்திற்குள் கடைகள் அமைத்த வியாபாரிகள் அங்கு சென்றனர். 

பின்னர் அவர்களிடம் நீங்கள் ஏன் இங்கு கடை போடுகிறீர்கள்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை பேரூராட்சி பணியாளர்கள் சமாதானம் செய்து வைத்தனர். அதன் பிறகு புதிய பஸ் நிலையத்திற்கு திரும்பி சென்றனர்.