பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே போடிநாயக்கன்பட்டி மண்கரடு பகுதியை சேர்ந்தவர் ராஜு மகன் கார்த்திகேயன் (28). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசராக கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் கார்த்திகேயன் மோகனூர் அருகே அணியாபுரம் காலனியில் உள்ள அவரது பாட்டியை பார்ப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு தனது மோட்டார் பைக்கில் வந்தார். லத்துவாடி அன்னம் பீட்ஸ் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த லாரி மோட்டார் பைக் மீது மோதியது. இதில் கார்த்திகேயன் பலத்த காயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் கார்த்திகேயனை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கார்த்திகேயனின் தந்தை மோகனூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நவப்பட்டி செங்கன்னூர் பேரேஜ் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.