உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் 3 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் 447 வார்டு உறுப்பினர் பதவிக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் சுமார் 5½ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நாமக்கல் நகராட்சி, எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூர், பாண்டமங்கலம், பரமத்தி, பொத்தனூர், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் மற்றும் வெங்கரை பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதேபோல் ராசிபுரம் எஸ். ஆர். வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராசிபுரம் நகராட்சி, அத்தனூர், பட்டணம், பிள்ளாநல்லூர், ஆர். புதுப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளும், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் மற்றும் மல்லசமுத்திரம், படைவீடு, ஆலாம்பாளையம் பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து முன்ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.