சேந்தமங்கலம்:
கொல்லிமலை அடிவாரம் அருகே உள்ளது வயக்காடு கிராமம். இந்த பகுதியை சேர்ந்த ஒரு விவசாயிக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் நேற்று கரும்பு வெட்டும் பணி நடந்தது. அப்போது அங்கு சுமார் 8 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு மெல்ல ஊர்ந்து சென்றது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பயந்து ஓடினர். அத்துடன் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நாமக்கல் வனச்சரகர் பெருமாள் உத்தரவின்பேரில் வன காப்பாளர் காசிமணி மற்றும் உதவியாளர்கள் கண்ணன், திருப்பதி ஆகியோர் அங்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து கொல்லிமலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவு பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.