ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள வாழைத்தார்களையும், அவற்றை வாங்க குவிந்த வியாபாரிகளையும் படத்தில் காண 
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பகுதிகளில் வாழைத்தார் விலை உயர்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சை நாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வாழைத்தார்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். 

இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு சுமார் 500 வாழைத்தார்கள் மட்டும் கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாழி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.150-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3&க்கு விற்பனையானது.

நேற்று  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்திற்கு சுமார் 1500 வாழைத்தார்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.150-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4 க்கும் ஏலம் போனது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழை பழங்கள் அதிக அளவில் தேவைப்படுவதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாழைத்தார்களை அதிக விலைக்கு வாங்கிச் சென்றனர். இதனால் வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.