நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூரை அடுத்த சாமந்தான்பேட்டையில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் சிறு மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசாணை வெளியிடப்படும் என சட்டமன்ற கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இதையடுத்து சாமந்தான்பேட்டையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் தொடங்கினர்.
இதற்காக சாமந்தான்பேட்டை கிராமத்திற்கு எக்கோ சவுண்டர் கருவிகளுடன் வந்த அவர்கள், கடல் முகத்துவாரம் அருகே இரு புறமும் கருங்கல் தடுப்பு சுவர் அமைய உள்ள பகுதியில் படகில் சென்று கடலின் மேல்மட்டத்திலிருந்து ஆழம் வரை அளவீடு செய்தனர். மேலும் கடல் ஆழத்தின் அடியில் உள்ள சேறு மற்றும் மணலையும் அவர்கள் தர ஆய்வுக்கும் எடுத்துக் கொண்டனர்.