உள்ளூர் செய்திகள்

பளுகல் அருகே வீடு புகுந்து தாய் -மகளிடம் கத்திமுனையில் நகை பறிப்பு

முகமூடி அணிந்த மர்மநபர் கைவரிசைசுமார் 3 பவுன் நகைகளை கொள்ளை அடித்து விட்டு மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

நாகர்கோவில் :

பளுகல் அருகே மேல்பாலையை அடுத்த மாங்காலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி. இவர் வெளிநாட்டில் உள்ளார்.

இவரது மனைவி அஜிதா (வயது 42). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று இரவு அஜிதாவும், அவரது மகளும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு வீட்டின் மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 2 பவுன் நகையை திருடினார். பின்னர் படுக்கையறைக்குள் புகுந்த நபர் அஜிதா மற்றும் அவரது மகளை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்த நகையை பறித்தார்.

சுமார் 3 பவுன் நகைகளை கொள்ளை அடித்து விட்டு மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அனிதா பளுகல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கொள்ளையன் முகமூடி அணிந்திருந்ததாக கூறினார். இதையடுத்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.