தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. தூத்துக்குடி பி.அன்.டி. காலனி பகுதியில் உள்ள சில தெருக்களில் மழை நீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி நள்ளிரவில் சென்று ஆய்வு பணிகளை தொடங்கியவர் இரவு முழுவதும் விடிய, விடிய அந்த பகுதிகளில் சுற்றிப் பார்த்து ஆய்வு நடத்தினார்.
அப்போது மழை நீர் வடிவதற்கு வசதியாக வடிகால்களில் அடைப்புகள் இருந்ததை கண்டு அதனை உடனடியாக அகற்றியும் வடிகால் இல்லாத தெருக்களில் புதிதாக பணிகள் முடிந்த வடிகால்களில் நீர் வருவததற்கு பாதை அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தார். மேலும் அந்த பகுதியில் வடிகால்கள் இல்லாத இடங்களில் வரும் நாட்களில் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். ஆய்வின்போது கவுன்சிலர் இசக்கிராஜா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.