பெரம்பூர் சுப்பிரமணியர் கோவிலில் பாலாலய விழா 
உள்ளூர் செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலய விழா

மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலய விழா நடைபெற்றது.

மாலை மலர்

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பெரம்பூர் மெயின் ரோடு அருகே சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆறுமுக கடவுளாக குடிகொண்டிருக்கும் வள்ளி தெய்வானை உடனாகிய சுப்பிரமணிய சுவாமி முதன்மையானதாகவும், வடமேற்கு மூலையில் ஆனந்தவள்ளி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் தனி சிவன் கோவிலாக அமைந்துள்ளது.

பிரம்மன் இக்கோவிலுக்கு வந்து கந்தபுஷ்கரணி அமைத்து 45 நாட்கள் விரதம் இருந்து பாவ விமோசனம் பெற்றார் என்பது வரலாற்று ஐதீகம். கடன் நிவர்த்தி ஸ்தலமாகவும், புத்திர பாக்கியம் அருள்பாலிக்கிற ஸ்தலமாகவும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இத்தகைய சிறப்புகள் பெற்ற இக்கோவில் பழைமை யானது. திருப்பணிகள் துவங்க நேற்று பாலாலயம் செய்தனர். செயல் அலுவலர் கோவிந்தராஜன், செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் கண்ணன், திருப்பணி உபயதாரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.