உள்ளூர் செய்திகள்

வன விலங்குகளை வேட்டையாடியவர் சிறையில் அடைப்பு

தருமபுரி அருகே வன விலங்களை வேட்டையாடியவர் சிறையில் அடைப்புவனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

மாலை மலர்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கணவனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(50). விவசாயி. இவர் தேங்கல்மேடு, கரடு, எருது கூட அள்ளி, கணவன அள்ளியை ஒட்டியுள்ள வன பகுதிகளில் இரவு நேரங்களில் முயல் ,காட்டு பன்றி, காடை, கெளதாரி, கீரிபிள்ளை உள்ளிட்ட வன விலங்குகளை நாட்டு வெடி, கூண்டு, கம்பி வலை போன்றவற்றின் மூலம் வேட்டையாடி வந்துள்ளார்.

நேற்று கணவனஅள்ளி அருகே உள்ள வனப் பகுதியில் வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி மற்றும் வலையுடன் நின்றிருந்தவர் வன காவலர்களை கண்டதும் ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரித்ததில் வன விலங்குகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தது தெரிய வந்தது.

அவரை பிடித்து சென்று அவரது வீட்டை சோதனை மேற்கொண்டதில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய வலை, கம்பி, நாட்டு வெடி, மற்றும் உப்புக்கறி உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த வன துறையினர் ரங்கநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.