நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக மகேஸ்வரி பொறுப்பேற்ற காட்சி. 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக மகேஸ்வரி பொறுப்பேற்பு

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக மகேஸ்வரி நியமனம் செய்யபட்டார். முதுநிலை பட்டப்படிப்பு முடித்துள்ள மகேஸ்வரி திருச்சியை சேர்ந்தவர் ஆவார்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் தமிழக உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக மாற்றபட்டார். இதனால் அந்த இடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்து வந்தது.

புதிய கமிஷனர்

இந்நிலையில் அந்த இடம் நிரப்பட்டு ஐ.ஜி அந்தஸ்த்தில் இருக்கும் மகேஸ்வரி நியமனம் செய்யபட்டார். இதனையடுத்து இன்று அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள மகேஸ்வரி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பியாக தமிழக காவல்துறையில் சேர்ந்து பின்னர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

இவர் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை நகர போக்குவரத்து காவல் ஆகிய இடங்களில் பணியாற்றினார். அதன் பின்னர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று தென் சென்னை இணை கமிஷனராகவும், சேலம் டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு மகேஸ்வரிக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர் சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றினார்.

முதல் பெண்

பி.இ. மற்றும் எஸ்.எஸ்.(ஐ.டி.) முதுநிலை பட்டப்படிப்பு முடித்துள்ள மகேஸ்வரி திருச்சியை சேர்ந்தவர் ஆவார். நேர்மையான போலீஸ் அதிகாரி என்ற பெயர் பெற்ற இவர் சட்டம், ஒழுங்கில் அனுபவம் மிக்க அதிகாரியும் ஆவார்.

மேலும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக முதன் முதலாக பொறுப்பேற்கும் முதல் பெண் ஐ.ஜி.யும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.