திருப்பரங்குன்றம்
அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும், அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. துணைப்பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வுக்கு இந்த பதவி வழங்கப்படும் என தொண்டர்கள் எதிர்பார்கின்றனர்.
இவர் ஆரம்பம் முதல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
மேலும் 2019-ம் ஆண்டு அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமையே வேண்டுமென முதலில் குரல் கொடுத்தவர் ராஜன் செல்லப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அ.தி.மு.க.வில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாவட்ட செயலாளராகவும் மதுரை மாநகர மேயராகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த நிலையில் தற்போது அந்தப் பதவி இவருக்கு கிடைக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.