அறுவடைக்கு தயாராக உள்ள கரும்புகள். 
உள்ளூர் செய்திகள்

கரும்பு கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் பாரபட்சம்

கரும்பு கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதால் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட கள்ளிக்குடி அருகே உள்ள தென்னம்ம நல்லூர் கிராமத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில்  விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். 

இந்த பகுதியிலுள்ள கூட்டுறவு சங்கஅதிகாரிகள் அரசு நிர்ணயம் செய்த ஒரு கரும்பின் விலை 33 ரூபாயை விட 13 ரூபாய்க்கு எடுப்பதாக கரும்பு விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

மேலும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள்  இப்பகுதியில் கரும்பு பயிரிட்டு உள்ளதாகவும், குறிப்பிட்ட விவசாயிகளிடம் மட்டுமே அரசு அதிகாரிகள் நேரடி கொள்முதல் செய்துள்ளதாகவும், இப்படி செய்வதால் மற்ற விவசாயிகள்  பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். 

இந்த பொங்கலை நம்பி கடந்த 10 மாதங்களாக ஏக்கருக்கு சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 வரை செலவு செய்து இருப்பதாகவும்., ஏக்கருக்கு 24,000 கரும்பு விளைவித்து ஒரு கரும்பை ரூபாய் 13-க்கு கொள்முதல் செய்வது நியாயமற்றது என்றும், முறையான அரசு நிர்ணயம் செய்த 33 ரூபாய் விலை கிடைத்தால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் விவசாயிகள்   தெரிவித்தனர். 

அரசு உடனடியாக தலையிட்டு வியாபார நோக்கத்துடன் இடைத்தரகராக செயல்படும் கூட்டுறவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள்   விடுத்துள்ளனர். 

இந்த விசயத்தில் நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அரசின் உத்தரவால் தனியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் தற்போது வாங்க தயக்கம் காட்டுவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.