திருமங்கலம்
திருமங்கலம் சியோன் நகரை சேர்ந்த ராஜசேகரன் மகன் கேரிகிப்ட்சன் சாம்(வயது10). மறவன்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். சிலம்பாட்டத்தில் ஆர்வமுடைய இவர், சிங்கப்பூரில் நடந்த சர்வதேச போட்டிக்கு தேர்வானார். இந்த போட்டிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வான 8 பேர்களில் மதுரை மாவட்டத்தில் இவரும் ஒருவர். தாயார் ரூபி, சிலம்ப மாஸ்டர் பொன்னுசாமி ஆகியோருடன் சிங்கப்பூர் சென்ற கேரி கிப்ட்சன் சாம் 10 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார்.
இவருக்கு உலக சிலம்பாட்ட தலைவர் டென்னிசன், சிங்கப்பூர் சிலம்பாட்ட தலைவர் சந்திரபிரபு ஆகியோர் பதக்கமும், சான்றிதழும் வழங்கினர். திருமங்கலம் திரும்பிய மாணவர் கேரிகிப்ட்சனை பொதுமக்கள் பாராட்டினர்.