கள்ளழகர். 
உள்ளூர் செய்திகள்

பழைய பொருட்களில் உருவாக்கிய கள்ளழகர்

மதுரை அருகே பட்டதாரி வாலிபர் பழைய பொருட்களில் கள்ளழகரை உருவாக்கியுள்ளார்.

மதுரை

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார். பொறியியல் டிப்ளமோபட்டதாரி. இவர் வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ள ழகரை பழைய பொருட்கள் மூலம் நேர்த்தியாக- தத்ரூபமாக உருவாக்கி அசத்தி உள்ளார். கணேஷ்குமார் கள்ளழகரை உருவாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வில்லாபுரம் வீட்டில் கள்ளழகர் உள்பட மேலும் பல சிலைகளை உருவாக்கி வைத்து வணங்கி வரும் கணேஷ் குமார் கூறியதாவது:& 

எனக்கு கைவினைப்பொருட்கள் செய்வதில் அலாதி விருப்பம் உண்டு. கிருஷ்ணஜெயந்தியின் போது, கிருஷ்ணர் உருவத்தை உருவாக்கினேன். அதன் பிறகு மயில் மேல் அமர்ந்து செல்லும் பிள்ளையார் மற்றும் முருகன் ஆகிய உருவங்களையும் வடித்து உள்ளேன்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை தத்ரூபமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம், கடந்த 2 ஆண்டுகளாகவே இருந்து வந்தது. அதனை இப்போது நனவாக்கி உள்ளேன். இதன் ஒரு பகுதியாக கள்ளழகர் குதிரையை தெர்மகோல் மூலம் வரைந்து 2-டியில் இருந்து முப்பரிமான த்துக்கு (3-டி) மாற்றம் செய்தேன்.

அடுத்தபடியாக வீட்டில் உள்ள சோப்பை தூளாக்கி அத்துடன் சோளமாவு, பெவிகால், தண்ணீர் ஆகிய வற்றை கலந்து களிமண் போல மாற்றி கள்ளழகரை வடித்து உள்ளேன். இதற்காக நான் பெரிய அளவில் செலவு எதுவும் செய்யவில்லை. வீட்டில் இருக்கும் பழைய துணிகள், பஞ்சு, கார்ட்-போர்டு, தெர்மாகோல், பழைய செய்தித்தாள்கள் ஆகியவற்றை கொண்டு சிலைகளை வடித்து வருகிறேன்.

எனது முயற்சிக்கு தந்தை, தாயார் மற்றும் சகோதரர்கள் ஊக்கம் அளித்து வருகின்ற னர். நான் 4-ம் வகுப்பு படிக்கும் போதே எனக்கு இந்தக் கலை மீது ஆர்வம் வந்தது. எனக்கு பென்சில் டிராயிங்கில் மிகுந்த ஆர்வம் உண்டு. எண்ணற்ற கார்ட்டூன்கள் வரைந்து உள்ளேன். கை வினைத்திறன், ஓவியத்தில் அக்கறை காரணமாக எனது மனநிலை மேம்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 இந்தக் கலைத்திறனை மற்ற குழந்தைகளுக்கும் கணேஷ்குமார் கற்றுத்தர விரும்புகிறார்.