கண்காணிப்பு காமிராக்களின் கட்டுப்பாட்டு அறையை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.  
உள்ளூர் செய்திகள்

மதுரை போலீஸ் நிலையங்களில் சுழலும் காமிராக்கள் பொருத்தம்

தமிழகத்தில் முதன்முறையாக மதுரை போலீஸ் நிலையங்களில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கமிஷனர் அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கலாம்.

மதுரை

போலீஸ் நிலையம் சென்றால் புகார் கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.

இதனை களையும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மாநகர ஆணையர் அலுவலகத்தில் ''கிரேட்'' திட்டம் (குறைபாடுகள் களைதல் மற்றும் கண்காணித்தல்) அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனை மாநகர ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதன்படி மதுரை மாநகரில் உள்ள 25 போலீஸ் நிலையங்களில் எழுத்தர் அறை பகுதியில், கணிணியுடன் கூடிய வரவேற்பு அறை உருவாக்கப்பட்டு, அங்கு 360 டிகிரி கோணத்திலும் சுழலும் வகையில், ஆடியோ பதிவுடன் கூடிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கலாம்.

போலீஸ் நிலையத்திற்கு வருபவரிடம், மனுதாரர் எந்த காரணத்துக்காக வந்துள்ளார்? அவரது பெயர், தேதி, நேரம், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை வரவேற்பாளர் பெற்று அதனை ''கிரேட்'' இணையதளத்தில் பதிவிடுவார்.

அதன் பிறகு கமிஷனர் அலுவலக கிரேட் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட புகார்தாரரை தொடர்பு கொண்டு புகாரின் தன்மை, போலீசாரின் விருந்தோம்பல் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்பார். இது போலீஸ் கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

போலீஸ் நிலையங்களில் பொதுமக்களிடம் மனுவை பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலோ, புகார்தாரரிடம் அத்துமீறி நடந்து கொண்டாலோ சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் கிரேட் அலுவலர்கள், இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கிரேட் திட்டம், காவல் நிலை யங்களில் பொதுமக்கள் நல்ல முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்யவும், குறைகளுக்கு விரைவாக தீர்வு காணவும், தேவையற்ற காத்திருப்பை தவிர்க்கவும் உதவும் வகையில் அமையும்.

இது தொடர்பாக மேலும் தகவல்கள் தெரிவிக்க விரும்பினால், 0452-2520760 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தரலாம்" என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

மதுரை மாநகர காவல்துறையின் கிரேட் திட்டம், காவல் நிலைய ங்களின் செயல்பாடுகளை முழுமையாக கண்காணிக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேல் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.