முகாம் 
உள்ளூர் செய்திகள்

தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்

மதுரையில் வருகிற 29-ந் தேதி தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

மாலை மலர்

-மதுரை

-மதுரையில் உள்ள தென் மண்டல தபால்துறை தலைவர் அலுவலகத்தின் உதவி இயக்குனர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தென்மண்டல தபால் துறை தலைவரின் கட்டுப் பாட்டில் உள்ள மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராம நாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தபால் அலுவலங்களில் வாடிக்கையாளர்களுக்கு தபால் சேவையில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கான குறை தீர்ப்புமுகாம் நடக்கவுள்ளது. 

இந்த முகாம் மதுரையில் உள்ள தென்மண்டல தபால் துறை தலைவர் அலு வலகத்தில் வருகிற 29ந் தேதி நடைபெற உள்ளது. 

அதற்கு முன்னதாக  மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள தபால் வாடிக்கை யாளர்கள் தங்களது புகார்களை தென் மண்டல தபால்துறை தலைவர் அலுவலகத்துக்கு வருகிற 18-ந்தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். 

புகார்களை அனுப்பும் போது தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர், பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர் விவரம், துரிததபால் (ஸ்பீடு போஸ்ட்), பதிவுத்தபால் ஆகியவற்றின் விவரங்களை குறிப்பிடவேண்டும். 

சேமிப்பு வங்கி சேவை, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு குறித்த புகாராக இருந்தால் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பாலிசிதாரரின் பெயர், முகவரி, பணம் செலுத்திய விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், தபால்துறையில் இருந்து பெறப்பட்ட கடித தொடர்பு விவரங்கள் ஆகியவற்றையும் புகார் மனுவுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.  ஏற்கனவே புகார் குறித்து சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் மனு கொடுத்து, கோட்ட கண் காணிப்பாளர் அளித்த பதில் திருப்தியளிக்காமல் இருந்தால் மட்டும் அந்த புகாரை அனுப்ப வேண்டும். 

புதிதாக தபால்துறை தலைவருக்கு அனுப்பும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. அதேபோல் புகார் மனுக்களை கூரியர் மூலம் அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்படாது. 

புகார் மனுக்களை உதவி இயக்குனர், தென்மண்டல தபால்துறை தலைவர் அலுவலகம் , மதுரை-2 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தபால் உறையின் மீது தபால்சேவை குறைதீர்க்கும் முகாம்- மார்ச் 2022 என்று குறிப்பிட வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .