கைதி சாவு 
உள்ளூர் செய்திகள்

மதுரை மத்திய சிறையில் கைதி சாவு

மதுரை மத்திய சிறையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென இறந்தார்.

மதுரை

மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது39). இவர் பெரியார் பஸ் நிலைய பகுதியில் மனைவி சுந்தரவள்ளியுடன் ஊசி-, பாசி-மணிகள் விற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் சுந்தரவள்ளி மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதை பாலமுருகன் தட்டிக்கேட்டார். இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாலமுருகன் உருட்டு கட்டையால் தாக்கினார். 

படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை அடித்துக்கொன்றதாக பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை மத்திய சிறையில் இருந்த பாலமுருகனுக்கு இன்று அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவருக்கு சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறைக் காவலர்கள் ராமச்சந்திரன்,  ராகேஷ் ஆகியோர்  பாலமுருகனை ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் வழியிலேயே பாலமுருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.