விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.  
உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம்

சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்க விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்படும். இந்த தகவலை வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். விவசாயி தெய்வப் பெருமாள் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் மாசானம், தோட்டகலை உதவிஅலுவலர் குமரேசன், ஊராட்சி துணைதலைவர் சித்தாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேளாண் பொறியியல்துறை உதவி பொறியாளர் மோகன் ராஜ் பேசியதாவது:-

தமிழகத்தில் ஆண்டுக்கு 2500 கிராமங்களை தேர்தெடுத்து 17 துறை சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி தற்சார்பு கிராமமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் வேளாண் பொறியியல்துறை மூலம், சோலார் மின்உற்பத்தி மையம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மின்மோட்டாருக்கு 70 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது.

மேலும் வேளாண் உற்பத்திபொருள் மதிப்பு கூட்டு சேமிப்பு கிடங்கு அமைக்க 50 சதவீதம், பண்ணை குட்டைகளுக்கு 100 சதவீதமும் மானியம் அளிக்கப்படுகிறது.

இது போன்ற திட்டங்க ளால் வேளாண்மையில் எந்திரமாக்கல் இலக்கை அடைய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாடிப்பட்டி தோட்டக்கலை துறைஉதவி இயக்குனர் சண்முகபிரியா பேசுகையில்,

விவசாயிகளுக்கு தேன்கூடு பண்ணை, மாவுமில் மற்றும் சொட்டு நீர்பாசன வசதி மானியத்தில் வழங்கப்படுகிறது என்றார்.

விதை இடுபொருள் மற்றும் கைதெளிப்பான் உள்ளிட்ட விவசாய உபகரணங்களும் மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண் உதவி அலுவர் விக்டோரியா தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் உழவன் செல்போன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.