மதுரை
மதுரை ஊமச்சிகுளம் புதுநத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் அஜய் ஆபிரகாம் (வயது 29). இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். அஜய் ஆபிரகாம் சம்பவத்தன்று இரவு காரில் கடச்சனேந்தல் பகுதிக்கு வந்தார்.
அப்போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டு இருந்த ஒரு காருக்கு பின்புறம் வண்டியை பார்க் செய்தார். அதன்பிறகு அவர் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்றார்.
இந்த நிலையில் 3 பேர் குடிபோதையில் வந்து காரை எடுக்க முற்பட்டனர். அப்போது அது டாக்டரின் கார் மீது இடித்தது.
எனவே அஜய் ஆபிரகாம் ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று தட்டிக்கேட்டார். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேர் கும்பல் அஜய் ஆபிரகாமை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு காரில் ஏறி தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து அஜய் ஆபிரகாம் திருப்பாலை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.