கள்ளக்குறிச்சி:
திருநாவலூர் அருகே பச்சைவேலி கிராமப் பகுதியில் உளுந்தூர்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட அழகிய கூழாங்கற்கள் இருந்தது.இதனையடுத்து லாரி டிரைவரான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 23) என்பவரை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அழகிய கூழாங்கற்களை கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூழாங்கற்கள் கடத்தப்படுவது தொடர்நிகழ்வாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.