உள்ளூர் செய்திகள்

கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்

இளங்கன்றுகளுக்கு உடல் சூடு ஏற்பட்டு அம்மை நோய் வருகிறது.தடுப்பூசி மற்றும் சத்து மாவுகள் போதிய அளவு இருப்பு இல்லாததால் பணிகள் தாமதம்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, வேலூர், ஆலத்தம்பாடி, மேலமருதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் அதிகமாக உள்ளனர்.

தற்போதைய காலநிலை மாற்றத்தாலும், சரியான சுற்றுச்சூழல் பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் இளங்கன்றுகளுக்கு உடல் சூடு ஏற்பட்டு அம்மை நோய் வருகிறது.

இதனால் இளங்கன்றுகளுக்கு உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்படுகிறது.

கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி மற்றும் சத்து மாவுகள் போதிய அளவு இருப்பு இல்லாததால் இளங்கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் பால் கறவை குறைந்து வருமானம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத நிலைக்கு தள்ளப்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே, உடனடியாக கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவருமான வக்கீல் நாகராஜன் மற்றும் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.