உள்ளூர் செய்திகள்

ஆழ்வார்திருநகரி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

முகாமில் சிறந்த கிடேரி கன்றுகளுக்கும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது.

தென்திருப்பேரை:

தமிழ்நாடு அரசு சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் குருகாட்டூர் ஊராட்சி கிராம சேவை மையத்தில் குருகாட்டூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு முகாமில் சிறந்த கிடேரி கன்றுகளுக்கும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கினார். முகாமில் தூத்துக்குடி மண்டல கால்நடை இணை இயக்குனர் சஞ்சீவி ராயன், திருச்செந்தூர் கால்நடை உதவி இயக்குனர் மருத்துவர் செல்வகுமார், ஆத்தூர் கால்நடை உதவி மருத்துவர் செந்தில் கண்ணன், தென்திருப்பேரை கால்நடை உதவி மருத்துவர் வினோதினி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை டி.வி.எஸ். சேவை அறக்கட்டளை சார்பில் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு நடத்தினர்.

SCROLL FOR NEXT