சென்னை:
தமிழக உணவு பாதுகாப்புதுறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உணவு வணிகம் என்பது மிகப்பெரிய அளவிலானது என்பதால் உணவு தொழில் செய்யும் வணிகர்களின் உரிமம் அல்லது பதிவு எண்ணை நுகர்வோர் அறிந்துகொள்வது எளிதானதாக இல்லை. நுகர்வோருக்கு உணவு வணிகரின் உரிமம் / பதிவு விவரம் அறிய முடியாத காரணத்தினால் உணவுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அதேபோல் அதிகாரிகளுக்கும் பெறப்படும் புகார்கள்மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.
தற்பொழுது உள்ள ஆணைப்படி அனைத்து வகை உணவு பொட்டலங்களின் மீது அச்சடிக்கப்படும் லேபிள்களில் உணவு பாதுகாப்பு துறையின் 14 இலக்க உரிமம் அல்லது பதிவு எண் கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு அறிவிப்பு பலகைகளை அனைவரும் அறியும் வகையில் வைக்கவேண்டும்.
தற்போது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 14 இலக்க உரிமம் / பதிவு சான்றிதழ் எண்ணை அனைத்து உணவு வணிகர்களும் தங்களின் ரசீதுகள் / விலைபட்டியல் / கேஷ் மோமோ / பில்களில், கட்டாயம் குறிப்பிட வேண்டும் என முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் வாகனங்களில் எடுத்துச்செல்லப்படும்போது வழங்கப்படும் Transport Challan, invoice மற்றும் Bill ஆகிய இரண்டிலும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் /பதிவு எண் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசால் கணினி மூலம் வழங்கப்படும் GST–e way bill க்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் வணிகர்களின் விவரம் அறிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் food safety connect app பதிவிறக்கம் செய்து அதில் 14 இலக்க உரிமம் அல்லது பதிவு எண்ணை உள்ளிட்டு உரிய விவரங்கள் பெறலாம், அல்லது foscos.fssai.gov.in என்ற உரிமம் / பதிவு விண்ணப்பிக்கும் இணையத்தில் வணிகர்களுக்கான FBO Search என்ற இடத்தில் 14 இலக்க உரிமம் அல்லது பதிவு எண்ணை உள்ளீட்டு உரிய விவரங்கள் பெறலாம்.
நுகர்வோர் foscos.fssai.gov.in என்ற இணையம் மூலமாக உரிமம் மற்றும் பதிவு எண்ணை குறிப்பிட்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும், ஏற்கனவே பொட்டலமிடப்பட்ட உணவுப்பொருட்களின் மீது FSSAI உரிமம் / பதிவு எண் அச்சிடபட்டிருந்தாலும், தயாரிப்பாளர் முதல் நுகர்வோர் வரையிலான விவரங்கள் முழுமையாக அறிய முடியவில்லை. விலை பட்டியலில் உரிமம் / பதிவு எண்ணை குறிப்பிடுவதால் மேற்கண்ட நடைமுறை சிக்கல் குறைய வாய்ப்புள்ளது.
எனவே, அனைத்து உணவு வணிகர்களும் நுகர்வோருக்கு வழங்கும் அனைத்து ரசீதுகள் / விலைபட்டியல்கள் / கேஷ் மோமோ/ பில்கள், ஆகியவற்றில் உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட 14 இலக்க உரிமம் / பதிவு எண்ணை 01.01.2022 முதல் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் ஆணையிட்டுள்ளது.
ஆகவே, காலம் தாழ்த்தாது அனைத்து உணவு வணிகர்களும் நுகர்வோருக்கு வழங்கும் அனைத்து ரசீதுகள் / விலைபட்டியல்கள் / கேஷ் மோமோ/ பில்கள், ஆகியவற்றில் உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட 14 இலக்க உரிமம் / பதிவு எண்ணை அச்சிட்டு வழங்க வேண்டும். மேலும் உரிமம் / பதிவு சான்றிதழ்கள் புதுப்பிக்காமல் காலாவதி ஆகியிருந்தாலோ அல்லது உரிமம் / பதிவு பெறாமல் இருந்தாலோ உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உணவு பாதுகாப்புதுறை ஆணையர் தெரிவித்துள்ளார்.