கோவை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சொக்கனூரை சேர்ந்தவர் 17 வயது மாணவி.
இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி பகவதி (வயது19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 4 வருடங்களாக செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த மே மாதம் 20-ந் தேதி மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பகவதி அங்கு சென்றார். அங்கு மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மாணவி 3 மாத கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தான் கர்ப்பமான விஷயத்தை தனது காதலனிடம் தெரிவித்தார். இதனையடுத்து பகவதி கடந்த 21-ந் தேதி மாணவியை அழைத்து சென்று கிணத்துக்கடவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து பெற்றோருக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்தார்.
பின்னர் மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மாணவியை மீட்டனர். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டததின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய பகவதியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.