நாகர்கோவில்:
அருவிக்கரை மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுஜர்சிங் (வயது 45), கொத்தனார்.
இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். வாரத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருவது வழக்கம்.
நேற்று வேலை முடிந்து ஊருக்கு வருவதற்கு சுஜர்சிங் தயாரானார். இதையடுத்து சுஜர்சிங் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் மங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குழித்துறைக்கு வந்தனர்.
பின்னர் குழித்துறை ரெயில் நிலையத்தில் இறங்கி னர். சுஜர்சிங் தவிர்த்து மற்ற நண்பர்கள் வீட்டிற்கு சென்றனர். சுஜர்சிங் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் ரெயிலை விட்டு இறங்கி குழித்துறை - நாகர்கோவில் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றார்.
அப்போது புனலூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ரெயில் சுஜர்சிங் மீது மோதியது. இதில் சுஜர்சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில் இன்ஜின் டிரைவர் நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா, சப் - இன்ஸ்பெக்டர் குமார் சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ரெயில் மோதிய இடத்தில் சுஜர்சிங்கின் கை, கால்கள் துண்டான நிலையில் கிடந்தது.
உடல் பாகங்களை காணவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் உடல்பாகங்கள் கிடைக்கவில்லை. தண்டவாளத்தில் நீண்ட தூரம் நடந்து வந்து தேடி பார்த்தனர். சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் சுஜர்சிங்கின் மீதி உடல் பாகங்கள் கிடந்தது.
அதையும் போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் ரெயில் என்ஜினில் உடல் பாகங்கள் சிக்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயில் என்ஜினில் சிக்கி இருந்த உடல் பாகங்களை மீட்டனர்.
அதன் பிறகு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மீட்கப்பட்ட சுஜர்சிங் கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.