கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்து உள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் கோவில் அமைந்து உள்ளது.
இந்த கோவிலில் ஐப்பசி மாத சனி பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணை, மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டு சர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம், உள்பட 16 வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.