மார்த்தாண்டம் :
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடர்பான அறிமுக கூட்டம் நல்லூர் பேரூராட்சியில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவி வளர்மதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அர்ஜூனன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயல் அலுவலர் விஜிலா விஜி பேசுகையில், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குவதற்கும் அவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அப்போதுதான் அரசு செப்டிக் டேங்க் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியும், முறையான பயிற்சி வழங்கியும் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.