உள்ளூர் செய்திகள்

பழங்குடியினர் பட்டியலில் மீனவர்களை சேர்க்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் மனு

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டிய நடவடிக்கை5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

நாகர்கோவில், நவ.20-

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.

மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து மனுக்களை கொடுத்தனர். மனு கொடுக்க வந்தவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், மீனவர்களை பழங்குடிகளாக அங்கீகரிக்க வேண்டம் என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டு, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு உடனே தொடங்க வேண்டும்.

தேங்காய்பட்டணம் துறைமுக வேலையை தணிக்கை குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தி தரமான வேலையை விரைவாக நடத்தி மேலும் உயிர்ப்பலி நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

அரசு அறிவித்தபடி மீன்பிடிக் கலன்களின் மீன்பிடி உரிமத்தின் கால அளவை பழையபடி 3 ஆண்டுகள் என்று மாற்ற வேண்டும். தமிழக துறைமுகங்களின் கட்டமைப்பை விரிவுபடுத்தி, வசதிகளை பெருக்கி, தமிழ்நாட்டு மீனவர்கள், மாநிலத்தில் உள்ள எந்த துறைமுகத்தையும் பயன்படுத்தச் செய்ய வேண்டுவது உள்பட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

SCROLL FOR NEXT