உள்ளூர் செய்திகள்

களக்காடு அய்யப்பன் கோவில் திறப்பு-பக்தர்கள் மாலை அணிந்தனர்

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு களக்காடு அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

மாலை மலர்

களக்காடு:

களக்காடு ஆற்றாங்கரை தெருவில் அய்யப்பன் கோவில் உள்ளது. சபரிமலையில் உள்ளதை போலவே இங்கும் பூஜை முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு களக்காடு அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதத்தின் முதல் தேதியான இன்று கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

களக்காடு ஆனந்த நடராஜர் திருவாசக குழுவினர் திருவாசக முற்றோதுதல் நடத்தினர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம் இடம்பெற்றது. இரவு 7 மணிக்கு அய்யப்பனுக்கு அபிஷேகமும், 8 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடத்தப்பட்டது. அதன் பின் இரவு 9 மணிக்கு அத்தழ பூஜை நடந்தது. வருகிற 1-ந்தேதி கும்பாபிஷேக விழாவும், டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை விழாவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை களந்தை சபரிமலை அய்யப்பன் கோவில் அறக்கட்டளையினரும், அய்யப்ப பக்தர்களும் செய்து வருகின்றனர்.