உள்ளூர் செய்திகள்

நகை திருடியவர் கைது

மோதிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவரை காணவில்லை.சி.சி.டி.வி காமிரா மூலம் நகை திருடியவர் சிக்கினார்.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த கீழநம்மங்குறிச்சியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது40).

இவர் பழைய பஸ் நிலையத்தில் நகை கடை வைத்துள்ளார்.

இவரது நகை கடைக்கு கடந்த 5-ந்தேதி டிப்டாப் உடையில் வந்த ஒருவர் மோதிரம் வேண்டும் என்று மாடல் பார்த்துள்ளார்.

அப்போது 2 கிராம் எடை கொண்ட ஒரு மோதிரத்தை தேர்வு செய்த அவர், வாசலில் எனது மனைவி நிற்கிறார்.

அவரிடம் காட்டிவிட்டு வந்துவிடுகிறேன் என்று கடை உரிமையாளரிடம் கூறிவிட்டு, மோதிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.

பின்னர் நீண்டநேரம் ஆகியும் அவர் வரவில்லை.

அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அய்யப்பன் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

முத்துப்பேட்டை துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு டிப்டாப் ஆசாமியை தேடிவந்தனர்.

இந்தநிைலயில் தலைமறைவாக இருந்த காரைக்கால் டி.ஆர். பட்டினம் புது காலனி பகுதியை சேர்ந்த குமரேசன் (50) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து, அவரிடம் இருந்த 2கிராம் மோதிரத்தை பறிமுதல் செய்தனர்.