உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் புதர் மண்டி கிடக்கும் ஜெயில்ஹில் குடியிருப்பு

100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் பயமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மாலை மலர்

ஊட்டி,

ஊட்டியின் மையப்பகுதியில் உள்ள ஜெயில்ஹில் குடியிருப்பில் அரசு ஊழியர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அங்கு நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக துப்புரவு பணியில் ஈடுபடவில்லை என தெரிகிறது.

இதனால் அங்கு உள்ள பாதையின் இருபுறமும் செடிகள் அடர்ந்து வளர்ந்து, புதர் மண்டி காட்சி அளிக்கிறது. எனவே அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் போக வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் புதர்களுக்குள் ஒளிந்திருக்கும் வனவிலங்குகள் அச்சுறுத்துகின்றன.

ஊட்டி நகரத்தின் மைய பகுதியில் உள்ள ஜெயில் ஹில் பகுதி, பராமரிப்பின்றி புதர்காடுகளாக மாறி கிடப்பது அங்கு வசிக்கும் பொதுமக்களை வேதனைப்படுத்தி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, ஜெயில்ஹில் பகுதியில் உள்ள சாலைகளில் மண்டிக்கிடக்கும் புதர்களை உடனடியாக வெட்டி அகற்றி, பொதுமக்கள் பயமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.