உள்ளூர் செய்திகள்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி மலைக்கோவிலுக்கு செல்ல லிப்ட் அமைக்க முடியுமா ?

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.மாற்றுத்திறனாளிகள் மலைக்கோவிலுக்கு செல்ல லிப்ட் வசதி அமைத்து தரப்படும்.

சுவாமிமலை:

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார்.

முன்னதாக கோவில் செயல் அலுவலர் உமாதேவி வரவேற்றார்.

கோவிலில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்ய லிப்ட் வசதி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கோவில் பிரசாத ஸ்டாலுக்கு சென்று அங்கு விநியோகம் செய்யப்படும் உணவு வகைகளை ஆய்வு செய்து மேலும் உயர்தரத்துடன் வழங்க அறிவுரை வழங்கினார்.

கோவிலில் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற செங்கல் கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.

ஆய்வின்போது இணை ஆணையர் மோகனசுந்தரம், கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா, மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.