அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு, புத்தூர் இட்டேரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கீதா (வயது 52). இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் நெத்திமேடு அருகே உள்ள பருப்பு மில்லில் வேலை செய்து வருகிறார்.
நேற்று வேலையில் இருந்த போது, கீதாவின் இடது கையில் போட்டிருந்த வளையல்கள் எந்திரத்தில் திடீரென மாட்டிக் கொண்டது. இதில் கண்ணிமைக்கும் கண நேரத்தில், இயந்திரத்தோடு சேர்ந்து கையும் சுழன்றது. இதில் அவரின் மணிக்கட்டு பகுதி நசுங்கியது.
படுகாயமடைந்து வலியால் துடித்த அவரை உடன் பணிபுரிவோர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.