ஓகேனக்கல்:
காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 9 ஆயிரத்து 70 கனஅடி தண்ணீரை அந்த மாநில அரசு திறந்துவிட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், பிலிகுண்டுலு, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதன்படி நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. மழை அளவு குறைந்ததால், நீர்வரத்து படிபடியாக குறைந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக பரிசல்கள் காவிரி ஆற்றில் கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து வாரவிடுமுறை நாளான இன்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால், பரிசலில் சவாரி செய்யமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.