சீர்காழி:
சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் அவைகூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபால், மேலாளர் காதர்கான், நகரமைப்புஆய்வாளர் நாகராஜன், வருவாய்ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற தீர்மானங்களை அலுவலர் ராஜகணேஷ் வாசித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது,
வேல்முருகன்: சீர்காழி தென்பாதி பகுதிகளில் நெகிழி பை போன்ற குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்வதில்லை. அதேபோல் சாலைகளில் வாழைமரங்கள், கீற்றுகள் போன்ற குப்பைகள் அகற்றபடாமல் மாதகணக்கில் கிடக்கிறது.
சாமிநாதன்: ஈசானியத்தெரு எரிவாயு தகண மேடை டெண்டர் விடாமல் ஏன் காலதாமதமாகிறது. முன்பு நடத்தி அனுபவம் உள்ளவருக்கு முன்னுரிமை அளித்து எரிவாயு தகணமேடை நடத்திட வேண்டும்.
ஆணையர் ராஜகோபால்: எரியாயு தகண மேடை டெண்டர் விரைவில் விடப்படும்.
ராஜசேகரன்: அரசு மருத்துவமனை கழிவுநீர் பாசன வாய்க்காலில் விடப்படுகிறது என பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை. தூய்மைபணியாளர்களுக்கு கையுறைகள், மண்வெட்டி, அரிவாள் போன்றவற்றை புதிதாக வாங்கிதர வேண்டும்.
கிருஷ்ணமூர்த்தி: எனதுவார்டில் புதிதாக மின்விளக்குகள் அமைத்திடவேண்டும்.
முபாரக் : சீர்காழி மணிகூண்டு பகுதி, பழைய பஸ் நிலையம் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. தற்காலிகமாக பேட்ஜ் பணியாவது செய்து அதனை நிரப்பவேண்டும்.
ராஜேஷ்: சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக அரசு, தனியார் பஸ்கள் பயணிகளை இறக்கவிட்டு செல்வதை தடுத்திட தீர்மானம் கொண்டுவரவேண்டும்.
தலைவர் துர்காபரமேஸ்வரி: சீர்காழி நகரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடைவிதிக்கவும், புறவழிச்சாலை வழியாக பஸ்கள் இயக்கப்படாமல் நடவடிக்கை எடுத்திடவும் கலெக்டர், கோட்டாட்சியர், போக்குவரத்து துறை அதிகாரிகளை அனைத்து உறுப்பினர்களும் நேரில் சென்று வலியுறுத்துவோம். அனைத்து வார்டுகளிலும் வாரம் 1 முறை மெகா தூய்மைபணி நடத்தப்படும். நகரை தூய்மையாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.