சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடந்த 8-ந்தேதி அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது கடற்கரை ஓரம் மணலில் மூன்று சிலைகள் இருப்பதை கண்டறிந்து தகவல் அளித்ததன் பேரில் புதுப்பட்டினம் போலீசார் மற்றும் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் நேரில் சென்று இரண்டு பெருமாள் சிலைகள் மற்றும் ஒரு அம்மன் சிலை ஆகியவைகளை கைப்பற்றி எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு சிலைகள் அதே கடற்கரையில் இருப்பதாக தகவல் அறிந்த வி.ஏ.ஓ. பவளச்சந்திரன் மற்றும் புதுப்பட்டிணம் போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த 3 அடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை மற்றும் இரண்டடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை ஆகிய இரண்டு சிலைகளையும் எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
ஏற்கனவே மீட்கப்பட்ட மூன்று சுவாமி சிலைகள் குறித்து நடைபெற்ற விசாரணையில் சிலைகள் சீனிவாச பெருமாள், துவாரபாலகர , சிம்மவாகனி என தெரியவந்தது
மேலும் கிடைக்கப்பெற்ற சிலைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் கடற்கரை மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது. யார் கொண்டு வந்து குறிப்பாக இங்கு போட்டார்கள். எதற்காக போட்டார்கள் என்றும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக சிதிலமடைந்த சிலைகளை மட்டுமே கோயில்களில் பயன்படுத்த மாட்டார்கள்.
ஆனால் இங்கு எடுக்கப்பட்ட அனைத்து சாமி சிலைகளும் சிதிலம் அடையாமல் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.
ஏன் நல்ல சாமி சிலைகளை இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்ற கோணத்திலும் புதுப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.