உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை: கவர்னரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார். விசாரணை இன்னும் தொடங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை அரசுத்துறை அதிகாரிகள் மீது பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

சிலர் மீது துறை ரீதியிலான விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பலர் மீதான விசாரணை இன்னும் தொடங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள கவர்னர் கைலாஷ்நாதன் அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார். இதனால் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை அரசின் சார்பு செயலாளர் கண்ணன் அரசுத்துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசுத்துறைகளில் பணிபுரியும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான வழக்குகளில் கவர்னருக்கு விரிவாக தெரிவித்திட அவசரமாக தகவல்கள் தேவைப்படுகிறது.

எனவே அத்தகையவர்கள் குறித்த முழு விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் vigil@py.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அதில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், அவர் மீதான குற்றச்சாட்டு, பணியிடை நீக்கம் என்றால் எதனால்? விசாரணை அதிகாரி யார்? அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்பன போன்ற விவரங்களை தெரிவிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT