பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே கார் தீப்பிடித்து எரிவதாக நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஒரு கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
அதில் இருந்து ஒருவர் தப்பி வெளியே வந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த ரிஷிகேஷ் (வயது 23) என்பது தெரியவந்தது. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.