வேளச்சேரி:
பெருங்குடி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது32). கூலித்தொழிலாளி. இவர் உறவினரான விஜயகாந்த் என்பவரின் வீட்டில் தங்கி வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி காலை பெருங்குடி ஏரியில் ராஜீவ் காந்தி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது உறவினரான விஜயகாந்த் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது, தனது மனைவியுடன் ராஜீவ்காந்தி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக தெரிவித்து உள்ளார்.
கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் ஆத்திரத்தில் இருந்த விஜயகாந்த் கடந்த 16-ந்தேதி இரவு உறவினரான ராஜீவ்காந்தியை தீர்த்துகட்ட முடிவு செய்து பெருங்குடி ஏரிக்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு இருவரும் மது குடித்தபோது போதையில் இருந்த ராஜீவ்காந்தியை தாக்கி அவரது கழுத்தை நெரித்து விஜயகாந்த் கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் உடலை ஏரியில் வீசி விட்டு விஜயகாந்த் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று உள்ளார்.
இந்த கொலை தொடர்பாக கைதான விஜயகாந்திடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.