சென்னை:
இலட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர், இன்று அண்ணா நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
தமிழ் நாட்டில் எப்போதும் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திமுக மற்றும் அதிமுக தான் ஆளும். லட்சிய திமுக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாததால் கட்டமைப்பை வலுப்படுத்திக்கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறோம்.
தற்போது தமிழக பாஜகவில் உள்ள தலைவர்கள் தொடர்ந்து அந்த கட்சியில் நீடித்தால் தமிழ் நாட்டில் தாமரை மலரவே மலராது. எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அதிமுக என்ற கட்சியை எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அழித்துவிட்டனர். ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் உடன் கைகோர்த்ததால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது இன்னமும் கோபம் குறையவில்லை.
மேலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஈழ தமிழர்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர். உணவுக்கும் குடி தண்ணீருக்கும் பிரச்சனையாக உள்ளது. பிரதமர் மோடி ஈழ தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.