உள்ளூர் செய்திகள்

மலைப்பாதையில் சுற்றிய காட்டு யானைகள் கூட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

காட்டு யானைகள் தனித்தனி குழுவாக சுற்றி திரிகிறது.வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சாலையை கடந்து வருகின்றனர்.

குன்னூர்:

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சமவெளி பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது.

இதனால் வனவிலங்குகள் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. குறிப்பாக காட்டு யானைகள் தனித்தனி குழுவாக சுற்றி திரிகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு காட்டேரி பூங்கா பகுதியில் 5 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி குன்னூர்-மேட்டுப்பளையம் மலைப்பாதைக்கு வந்தது.

யானைகள் சாலையில் அங்குமிங்கும் நடமாடியது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தங்கள் வாகனங்களை சிறிது தொலைவிேலயே நிறுத்தி விட்டு, யானையை பார்த்தனர்.

மேலும் யானை பார்த்ததால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியாக சத்தம் போட்டனர். ஆனால் யானைகள் அங்கிருந்து நகரவே வில்லை.

தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் சுற்றிய யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்றது. அதன்பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து தங்களது வாகனங்களை இயக்கி சென்றனர்.

யானைகள் நடமாட்டம் அடிக்கடி இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே இந்த சாலையை கடந்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் எக்காரணத்தைக் கொண்டும் அதை புகைப்படம் எடுக்கக் கூடாது. தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் மலைப்பாதையில் பயணிப்பதால் வன விலங்குகளை அவர்கள் இடையூறு செய்யாத வகையில் வன ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.