உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழை

சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது.கனமழையை தொடர்ந்து இரவு முழுவதும் பரவலாகவும், விட்டு விட்டும் மழை பெய்தவாறு இருந்தது.

Maalaimalar

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டனர். மேலும் இரவில் புழுக்கம் காரணமாக தூக்கத்தை இழந்தனர்.

இந்த நிலையில், நேற்றும் கடும் வெயில் வீசியது. பின்னர், மாலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதை தொடர்ந்து மாலையில் லேசாக தூற தொடங்கி, சிறிது நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது.

மேலும், ஓசூர்-பாகலூர் சாலை, ராயக்கோட்டை ரோடு சர்க்கிள், ஓசூர் பஸ் நிலையம், பழைய நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

கனமழையை தொடர்ந்து இரவு முழுவதும் பரவலாகவும், விட்டு விட்டும் மழை பெய்தவாறு இருந்தது. பலத்த மழை பெய்ததை அடுத்து இரவில் குளுகுளு காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்து நிம்மதியாக உறங்கினர். ஓசூரில் நேற்று பெய்த மழையின் அளவு 18 மி.மீ ஆகும்.