உள்ளூர் செய்திகள்

தோட்டத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கல்- பஞ்சாயத்து உறுப்பினரின் கணவர் கைது

கோடவிளை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.9 குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார் வாலகுருவை கைது செய்தனர்.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி பகுதியில் எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரி கோவில் பகுதியில் வந்த ஒரு காரை மறித்து அதை சோதனை செய்தனர்.

அப்போது ஒரு மூட்டையில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் திசையன்விளை அருகே உள்ள காளிகுமாரபுரத்தை சேர்ந்த வாலகுரு (வயது 37) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் திவீர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் விற்பனைக்காக குட்காவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதன்பேரில் கோடவிளை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு 8 மூட்டைகளில் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 9 குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார் வாலகுருவை கைது செய்தனர்.

இதன் மொத்த எடை 169 கிலோ ஆகும். தொடர்ந்து இவர் எங்கிருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்தார். யாரிடம் விற்பனை செய்வதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தார். இதில் தொடர்புடையவர்கள் யார்? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட வாலகுரு நவ்வலடி பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரின் கணவர் ஆவார்.