ஆளுநர் ஆர்.என்.ரவி  
உள்ளூர் செய்திகள்

சனாதன தர்மத்தால் உருவான நாடு இந்தியா - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் வானகரத்தில் நடைபெற்றது.சனாதன தர்மத்தின் ஒளியாலேயே இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை:

சபரிமலை ஐயப்பனுக்கு மிகவும் நெருக்கமான பாடலான ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் சென்னை வானகரத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆன்மீகப் பெரியோர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

இசைஞானி இளையராஜா, நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாடகி சித்ரா, நடிகர் ஜெயராம், பி.வாசு, நடிகர் அஜய் தேவ்கன், உள்ளிட்டோர் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா உருவாக்கப்பட்டது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்திய நாடு மக்களால் உருவாக்கப்பட்டது. அரசுகளால் உருவாக்கப்படவில்லை. மக்கள் உழைப்பால் உருவானது தான் நம் நாடு. அரசுகள் அதனை வடிவமக்க மட்டுமே செய்தன.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்குடன் தற்போது பயணித்து வருகிறோம். 2047-ல் உலகிலேயே பலம் வாய்ந்த நாடாக இந்தியா மாறும், அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என குறிப்பிட்டார்.