சிங்கப்பூரை சேர்ந்த அறக்கட்டளையினர் நன்கொடையாக ரூ.27 லட்சம் காசோலையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வழங்கினர். 
உள்ளூர் செய்திகள்

பார்வையற்றோர் அரசு பள்ளி மேம்பாட்டுக்காக சிங்கப்பூரை சேர்ந்த அறக்கட்டளை ரூ.27 லட்சம் நன்கொடை

பார்வை திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் படித்து வருகின்றனர்.நன்கொடை மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மிகத் தரமான கட்டிடம் கட்டப்பட்டு ஐந்து மாதங்களில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிக்காக சிங்கப்பூரை சேர்ந்த அறக்கட்டளை சார்பில் ரூ.27 லட்சத்தை நன்கொடையாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வழங்கப்பட்டது.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் இயங்கி வரும் பார்வை திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவை என பள்ளி தலைமை ஆசிரியை சோபியா மாதவி வைத்த கோரிக்கையை ஏற்று சிங்கப்பூரை சேர்ந்த அன்னை வராகி அறக்கட்டளை சார்பில் உறுப்பினர்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.27 லட்சத்துக்கான காசோலையை அறக்கட்டளை நிர்வாகி குருஜி வராகி மைந்தன், இந்திரயோகன் ஆகியோர் வழங்கி உள்ளனர்.

இந்த நன்கொடை மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மிகத் தரமான கட்டிடம் கட்டப்பட்டு ஐந்து மாதங்களில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் ‌.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சோபியா மாதவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.