மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி முந்தல் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் 5 அடி அகல உறைகிணறு உள்ளது. சுமார் 100 அடி வரை ஆழமுள்ள இந்த கிணற்றில் ஒரு பசுமாடு தவறி விழுந்தது.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போடி தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடம் எந்தவித நவீன உபகரணங்களும் இல்லாததால் கடுமையான போராட்டத்துக்கு பிறகு பசு மாட்டை மேலே கொண்டு வந்தனர்.
அந்த சமயத்தில் பக்கவாட்டு சுவற்றில் இருந்த கருநாகப்பாம்பு பசுமாட்டை சீண்டியது. இதனால் மாடு மீண்டும் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அப்போது தீயணைப்பு வீரர்களும் தவறி விழுந்து காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து கருநாகப்பாம்பையும் வனத்துறையினர் உயிருடன் பிடித்து அதனை வனப்பகுதியில் விட்டனர்.
அதன் பின்பு எஸ்காட்ஸ் எந்திரம் கொண்டு வரப்பட்டு மாலை 6 மணிக்கு பசு மாடு மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு துறையினருக்கு நவீன உபகரணங்கள் இல்லாததால்தான் பசு மாடை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
10 மணி நேரம் வனத்துறையினர் போராடி பசு மாட்டை மீட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.