படுகாயமடைந்த தொழிலாளி ரவி. 
உள்ளூர் செய்திகள்

முதலை கடித்து மீன்பிடி தொழிலாளி படுகாயம்

தீடீரென கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலை ரவியின் கால்களை கவ்வி கடித்தது. திருப்பனந்தாள் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே அணைக்கரை மீனவ தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 55). மீன்பிடிக்கும் தொழிலாளி.

இவர் வழக்கம் போல் கொள்ளிடத்தில் மீன்பிடிப்ப தற்காக அங்குள்ள மதகு கட்டையில் உட்கார்ந்து கொண்டு தனது மீன்பிடி வலையின் மூலம் மீன்பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது தீடிரென கொள்ளிட ஆற்றில் உள்ள முதலை ரவியின் கால்களை கவ்வி கடித்து தண்ணீரில் இழுத்து சென்றது.

அப்போது ரவியின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த மீன்பிடி தொழிலாளர்கள் துரிதமதாக செயல்பட்டு ரவியை முதலையிடமிருந்து மீட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த ரவியை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.